இரங்கல்!

உனக்கு எதிரிகளே இல்லை என்கிறாயா..?
உண்மையில்,
அது பரிதாபத்திற்குரியது நண்பனே…
உனது தற்பெருமை பொருளற்றது.
கடமையுணர்வோடு
வீரர்கள் களம் புகும்
பெரும் போரில் குதித்தவன்,
நிச்சயம்
எதிரிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
அவ்வாறு இல்லையேல்,
உனது பணி மிகச் சிறியதே.
ஏனெனில்,
நிச்சயம்
நீ எந்த துரோகியையும்
எட்டி உதைத்திருக்கவில்லை…
பொய்மையின்
முகத்திரையை கிழித்திருக்கவில்லை..
ஒருபோதும்
தவறுகளைத் திருத்தியிருக்கவில்லை…
என்ன சொல்ல,
ஒரு கோழையாய்த் தான் வாழ்ந்திருக்கிறாய்.
- சார்லஸ் மக்கே (1814-1889)
கட்சி வேறுபாடின்றி, வர்க்க வேறுபாடின்றி, அத்வானி முதல் டாடா வரை, எல்லோரும் ஜோதிபாசுவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த பொழுது, சார்லஸ் மக்கே-யின் மேற்காணும் கவிதைதான் மனதில் நிழலாடியது…
COCKtail தேவதை!
பிறகொரு நாளின் நள்ளிரவில்
கோப்பை கவிழ்த்த ஆண்டனியின்
குறியை சப்பிக் கொண்டிருந்த பொழுதில்
தேவதையின் யோனியில்
வார்த்தைகள் வழிந்தன.
பரவசத்தின் உச்சத்தில்,
ஆயிரத்தி ஒன்றாம் முறையாய்
கட்டவிழ்த்தலின் சூட்சுமத்தை
காது மடல்களில் ஆண்டனி கிசுகிசுத்தான்.
“விந்து பீச்சட்டும்.
ஆங்கே கமிசார்களை கட்டவிழ்.
யோனி விரியட்டும்.
ஒருங்கே புரட்சியைப் புரட்டு.
மயக்கம் வரப் புணர்.
மார்க்சிய சொல்லாடல் மிக முக்கியம்.
COCKtail-ஆக கலந்து வை.
ஃபூக்கோவின் லேபிளை ஒட்டி விடு.
பிரதியின் சூட்டில்
இலக்கியம் விரைக்கும்.
மெக்கார்த்தி புன்னகைப்பான்.
மாலை விருந்திற்காக கண்ணடிப்பான்.
மீண்டும் வரலாறு முடிவுக்கு வந்திருக்கும்.
புருவத்தை சரி செய்.
புகைப்படமாக எடுத்து வை.
உன்னைச் சுற்றி
இயங்குகிறது உலகம்.
உன்னைச் சுற்றித் தான்
இயங்குகிறது உலகம்.
உன்னைத் தான் சுற்றித் தான்
இயங்குகிறது உலகம்.
உலகின்
அழகிய,
அழகில்லாத,
அழகாய் இருக்க முடியாத,
அழகாய் இருக்க வக்கில்லாத,
அழகாய்ப் பிறக்காத,
அழகாய்ப் பிறக்க முடியாத,
அனைத்துப் பெண்களின் விடுதலையும்,
நீ கட்டவிழ்க்கும் கவிதைகளுக்காகத்தான்
காத்துக் கிடக்கிறது என்பதை அறிவித்து விடு.
கிளாரா ஜெட்கினை விஞ்சிய
பெண் விடுதலைப் போராளியே!
என போஸ்டர் அடிக்க காசு கொடு.
மர்லின் மன்றோ பாவாடையில்
அதனை ஒட்டச் சொல்.
கம்யூனிஸ்டுகளைப் பற்றிக் கவலைப்படாதே,
மிஞ்சிப் போனால்
எழுதப்படும் ஒரு கட்டுரையையும்,
பூதக் கண்ணாடியால் சலிப்பதற்கு
நீதி தேவன்கள் காத்திருக்கிறார்கள்.
கேள்விகளால் துளைத்து விடுவார்கள்.
“இதற்கு ஆதாரம் என்ன? அதற்கு ஆதாரம் என்ன?”
“ஏன் கொச்சை வார்த்தைகள்?”
“நீங்களா இப்படி?”
சட்டம் சட்டம்தான்,
முகத்தில் சிறுநீர் கழித்தாலும்,
கண்ணியவான்கள் வாழும் நாட்டில்
கண்டபடி பேசக் கூடாது.
கண்ணியமாக துடைத்து விட்டு,
கண்ணியமாகத்தான் முறையிட முடியும்.
மார்க்சியம் அவர்களுக்கு முகம்.
தேவதைகளுக்கோ படுக்கை விரிப்பு.
வேண்டும் போது விரிக்கலாம்.
வேண்டாத போது சிறுநீர் கழிக்கலாம்.
தேவதைகளின் சிறுநீர்,
கவிதை.
கம்யூனிஸ்டுகளின் கோபம்,
கொலைக் குற்றம்.
எனவே,
மார்பைக் குலுக்கு.
மயிரை பிய்த்துப் போடு.
போதை கிறக்கத்தில்
COCKtail-ஐ மட்டும் மாற்றி விடாதே…
கட்டவிழ்த்தலுக்கும்
விதிமுறைகள் உண்டு.
பாரத மாதா,
இந்து ராஷ்டிரம்,
பாபர் மசூதி
என எதையும் சேர்த்து விடாதே.
சரஸ்வதியாக சந்தில் நிறுத்தி விடுவார்கள்.”
லெனின் ஃப்ராய்டைப் புணர வேண்டும் என எழுதுவது தனிமனிதத் தாக்குதல் அல்ல, மஞ்சள் எழுத்து இல்லை, மாறாக கட்டுடைத்தல். ஆனால்,ஜெரால்டுக்கு குறியில்லை என எழுதுவது, ஃபோர்ட் போலியோ எடுத்து தன் மூஞ்சியை தானே ரசிக்கும் அற்பத்தனத்தை குறிப்பது ஆகியன தனிமனிதத் தாக்குதல். இத்தகைய புரிதலைக் கொண்டிருக்கும் எல்லா ஆண், பெண் COCKtail தேவதைகள், மர்லின் மன்றோக்கள், கலகப் போராளிகளுக்கும்,அவர்களின் எழுத்துக்களில் பேரின்பமும், சிற்றின்பமும் பெற்று சிலாகிக்கும் ரசிகக் கண்மணிகளுக்கும் சமர்ப்பணம்.
…
(வினவில் நடந்த விவாதத்தையொட்டி எழுதப்பட்டது)
லெனின் மீண்டும் இளமையாகி விட்டார்…



அவதூறுகளின் குப்பைகளால்
மூடப்பட்டு கிடக்கின்றன
வரலாற்றின் பக்கங்கள்.
கண்களை திசை திருப்பலாம்,
காதுகளை செவிடாக்கலாம்.
காற்றை என்ன செய்வாய்?
இதோ,
திசைகளைக் கிழிக்கும்
காற்று வீசுகிறது!
மண்டி கிடக்கும் குப்பைகள்
பறந்து போகின்றன…
ஜாரின் அரண்மனையை
சுற்றி வளைத்த குரல்கள்
நியூயார்க்கில் ஒலிக்கின்றன…
இராக்கில் எதிரொலிக்கின்றன!
பணப்பெட்டிகள்
கவிழ்ந்து விழ,
பல்லிளித்தவாறு நிற்கிறாய்!
“முதலாளித்துவம் ஒழிக!”
“கம்யூனிசமே வெல்லும்!”
உனது கோட்டைக்குள்ளேயே
முழக்கங்கள் அதிருகின்றன…
உலகெங்கும் எதிரொலிக்கின்றன!
கொக்கரித்த சிரிப்படங்கி
நீ முகம் சிவக்கிறாய்!
மேசைக்கடியில்
ஒளிந்து கொள்கிறாய்!
அவசரமாக ஆயுதங்களை
தொட்டுப் பார்க்கிறாய்…
நனவான கனவுகளின்
நீண்ட பாதையில்
சில மைல் கற்களை
நீ பெயர்த்தெடுத்திருக்கலாம்!
அவசரமாக அவற்றை
குழிதோண்டி புதைத்திருக்கலாம்.
எனினும்,
முளைத்துக் கொண்டேயிருக்கின்றன
புதிய மைல்கற்கள்.
நனவுகளை நொறுக்கலாம்.
கனவுகளை என்ன செய்வாய்?
இதோ,
எதிர்காலத்தின் கனவுகள்
எமது மக்களின் கண்ணீரிலிருந்தும்,
உனது கொலைவாட்கள் ருசித்த குருதியிலிருந்தும்,
விடை தேடும் எங்கள் வியர்வையிலிருந்தும்,
நொடிக்கொரு முறை அலை அலையாய்
எழுந்து ஆர்ப்பரிக்கின்றன…
எங்கள் போர் மீண்டும் துவங்குகிறது..
இதயங்கள் பலமாகத் துடிக்கின்றன..
லெனின் மீண்டும் இளமையாகி விட்டார்…
அக்டோபர் மீண்டும் மலர்கிறது…*

இக்கவிதை இன்று நவம்பர்-7, ரசியப் புரட்சி நாளையொட்டி எழுதப்பட்டுள்ளது.
…
* என்.டொப்ரொன்ரவோவ் எழுதிய பாடல் வரிகளிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. 1927-ல் செர்கேய் ஐசன்ஸ்டீன் இயக்கிய ‘அக்டோபர்’ திரைப்படத்தில், ரசியப் புரட்சியின் நாட்களை உணர்வுபூர்வமாக விவரிக்கும் காட்சித் தொகுப்பிற்கு இப்பாடல் பயன்படுத்தப்பட்டது. அக்காட்சி தொகுப்பு மேலே தரப்பட்டுள்ளது. இப்படம் ஜான் ரீடின் “உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்” நாவலை அடிப்படையாகக் கொண்டது.
பத்து வருடங்களாகப் போராடும் ஐரோம் சர்மிளா!
வரும் நவம்பர் 2, 2009 அன்று, மணிப்பூரைச் சேர்ந்த கவிஞரும், செயல் வீரருமான ஐரோம் சர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டத்தின் பத்தாவது ஆண்டு துவங்குகிறது. இந்திய அரசின் ஆயுத படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் (AFSPA) திரும்பப் பெறக் கோரி, அவர் கடந்த பத்தாண்டுகளாக போராடி வருகிறார்.
1958-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இச்சட்டத்தின்படி, வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும், எவரையும் வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும், அவர்களது வீடுகளில் புகவும், சந்தேகத்தின் பேரிலேயே கூட சுட்டுக் கொலை செய்யவும் இந்திய இராணுவத்திற்கு அதிகாரம் உண்டு. இதற்கெதிராக சட்டப்பூர்வமாக கூட இராணுவத்தை தண்டிக்க முடியாது.
இந்திய இராணுவப் படைகள், இச் சட்டத்தின் அரவணைப்பில், சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள், கொலைகள், கட்டாய ஆட்கடத்தல்கள் என அட்டூழியம் செய்து வருகின்றன. இதன் மூலம் நாட்டிற்கே தலைகுனிவையும், மணிப்பூர் மக்களுக்கு சொல்லொணாத் துயரத்தையும் கொடுத்து வருகின்றன. “இச்சட்டம் ஒடுக்குமுறையின் சின்னமாக மாறி விட்டது. மக்களின் வெறுப்பிற்குரிய சட்டமாகவும், எதேச்சதிகாரம் மற்றும் பாகுபாட்டின் கருவியாகவும் விளங்குகிறது” என அரசாங்கம் நியமித்த ஜீவன் ரெட்டி கமிசனே கூறியுள்ளது. இனப் பாகுபாட்டிற்கான ஐ.நா கமிட்டி இச்சட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
நவம்பர் 2, 2000 அன்று, மணிப்பூரிலுள்ள மாலோம் எனும் இடத்தில் பத்து குடிமக்களை, இந்திய இராணுவம் படுகொலை செய்ததைக் கண்டித்து, கவிஞர் ஐரோம் சர்மிளா தனது உண்ணாவிரதத்தைத் துவங்கினார். இந்தியக் குற்றவியல் சட்டம் 307-ன் படி அவர் தற்கொலை செய்ய முயன்றார் என நான்கு நாட்களில் அவரை கைது செய்தது இந்திய அரசு. இதனைத் தொடர்ந்து அவரது உடல்நிலை படிப்படியாக மோசமடைந்தது. அவர் சொட்டுத் தண்ணீர் கூட குடிக்க மறுத்து விட்டார்.
நவம்பர் 21, 2000 அன்று, அவரது மூக்கில் பிளாஸ்டிக் குழாய் சொருகப்பட்டு, அவரது உடலில் திரவ உணவு வலுக்கட்டாயமாக செலுத்தப்பட்டது. கடந்தப் பத்தாண்டுகளாக இந்தத் திரவ உணவின் மூலமாகவும், உச்சகட்ட பாதுகாப்புடன் தனிமைச் சிறையில் வைத்து அவரது உயிரை இந்திய அரசு கையில் பிடித்து வைத்துள்ளது. ஒவ்வொரு வருடமும் அவர் விடுதலை செய்யப்படுவதும், உடனடியாக மீண்டும் கைது செய்யப்படுவதும் என தொடர் நிகழ்வாகியுள்ளது.
அவரது இடையறாத போராட்டத்திற்கு ஆதரவாக மணிப்பூர் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், கடந்த டிசம்பர் 10, 2008 முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவரது உறுதிமிக்க போராட்டத்தின் பத்தாண்டு துவக்கத்தை, “நம்பிக்கை, நீதி மற்றும் அமைதியின் திருவிழா” என மக்கள் மத்தியில் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளனர். எனவே, அமைதியிலும், நீதியிலும், ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டுள்ள அனைவரும் அவரது போராட்டத்திற்கு ஆதரவளிப்பது அவசியமானதாகும்.
(‘மணிப்பூர் சுதந்திரம்’ இணையத் தளத்தில் வெளியாகியுள்ள அறைகூவலின் அடிப்படையில்)
தார்மீகத் திசைகாட்டி!
குறிப்பு: மனித உரிமைப் போராளி முனைவர் கே.பாலகோபாலின் நினைவாக இப்பதிவு எழுதப்பட்டுள்ளது. திரு.கோ.சுகுமாரன் எழுதிய இரங்கலிலிருந்து சில மேற்கோள்களும், எழுத்தாளர் வ.கீதா எழுதிய இரங்கலின் மொழியாக்கமும் தரப்பட்டுள்ளது. கீழ்க்காணும் கட்டுரைகளின் சில கருத்துக்களிலும், பாலகோபால் அவர்களின் சில கருத்துக்களிலும், எனக்கு கருத்து மாறுபாடு உண்டென்றாலும், மனித உரிமைச் செயல்பாடுகளில் முன்னுதாரணமாக விளங்கிய பாலகோபால் அவர்களைக் குறித்து தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்துடனேயே இப்பதிவு வெளியிடப்படுகிறது.

வாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மனித உரிமைப் போராளி டாக்டர் .கே.பாலகோபால் (வயது: 52) நேற்று (08.10.2009), ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு மனைவி (வசந்தாலஷ்மி), ஒரு மகன் (பிரகதா) உள்ளனர். நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஈடு செய்ய முடியாத இழப்பு இது. மனித உரிமைத் தளத்தில் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர் ஒரு சிறந்த வழிகாட்டி.
ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் பிறந்த பாலகோபால், கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.வாராங்கலிலுள்ள கக்காடியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிவர். நக்சல்பாரி அரசியல் மீது ஏற்பட்ட ஈர்ப்புக் காரணமாக அவர் தன் வேலையை உதறிவிட்டு, மனித உரிமைக் களத்தில் இறங்கியவர்.
காவல் மரணங்கள், போலி மோதல், மரண தணடனை ஒழிப்பு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்திப் போராடியவர். ‘ஆந்திரபிரதேச சிவில் உரிமைக் குழு’ என்ற அமைப்பில் பணியாற்றியவர். நக்சலைட் அமைப்புடன் முரண்பாடு ஏற்பட்டு, தனியாக ‘மனித உரிமை அமைப்பு’ நிறுவி செயல்பட்டவர்.
80-களில் ஆந்திர போலீசார் முன்னின்று நடத்திய ‘பிரஜா பந்து’ என்று அமைப்பினரால் கடத்தப்பட்டவர். இவரைக் கடத்தி வைத்துக் கொண்டு நக்சலைட் அமைப்பினர் பிடியில் இருந்த இரண்டு போலீசாரை விடுவிக்க ‘பிரஜா பந்து’ அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். பின்னர் நக்சலைட்கள் இரண்டு போலீசாரையும் விடுவித்த பின்னர் விடுவிக்கப்பட்டவர்.
போலி மோதல் குறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வாதாடி, போலி மோதல் நடந்தால் இந்திய தண்டனைச் சட்டம் 302 பிரிவின்கீழ் போலீசார் மீது வழக்குப் பதிய வேண்டும் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை பெற்றுத் தந்தவர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக ஆந்திர உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தவர்.
தலை சிறந்த எழுத்தாளர். தொடர்ந்து EPW போன்ற இதழ்களில் எழுதி வந்தவர். அவரது எழுத்தில் நேர்மையும், கறாரான பார்வையும் வெளிப்படும்.
புதுவை கோ.சுகுமாரன்,மனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் காலமானார் -இரங்கல்!,09-10-2009
…
முதலில், அவரது மரணம் குறித்த செய்தி, ஒரு மிகப் பெரிய பொய்யாகத் தோன்றியது. அது சாத்தியமில்லை. கடந்த வாரம் கூட அவர் சுறுசுறுப்பாக எப்பொழுதும் போல் வேலை செய்து கொண்டிருந்தார். 1998-ல் அவரும், வேறு சிலரும் துவக்கிய மனித உரிமை மன்றத்தின் பத்தாண்டு நிறைவையொட்டி, அனந்தபூரில் நடைபெறவிருந்த மனித உரிமை மாநாட்டுக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தார். ஒவ்வொரு வார இறுதியிலும் பல்வேறு மாவட்டங்களுக்கு அவர் பயணிப்பதும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக அரசோ, தனியார் நிறுவனங்களோ நிகழ்த்தும் நிலப் பறிப்பு… அபாயகரமான திறந்தவெளி அகழ்வு(open cast mining)… விவசாயிகள் தற்கொலை..பழங்குடி சமூகங்களில் உடல் நலப் பிரச்சினைகள்…என ஒவ்வொரு உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதும், அவரது வாழ்க்கை முறையாகி விட்டிருந்தது.
மற்றுமொரு குடியுரிமை ஆர்வலர் என பாலகோபாலை சுருக்கி விட முடியாது. பொது வாழ்க்கைக்காக தான் பார்த்து வந்த பல்கலைக்கழகப் பணியை உதறிய சிறந்த கணித நிபுணர்.. அறம் சார்ந்த சந்தேகங்களும், அக்கறைகளும் இருந்த போதிலும், அரசியலுக்கு அர்ப்பணித்துக் கொண்டவராகவும், மக்களுக்கு கடமைப்பட்டவராகவும் வாழ்ந்தவர்… சொல்லும், செயலும், சிந்தனையும் ஒத்திசைவோடு இயங்கியவர்…
எங்களில் பலருக்கு அவர் எந்த முறையில் தமது வாழ்க்கையை வாழ்ந்தோரோ, அது அவர் பேசியவற்றுக்கு இணையாக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவர் ஒரு தார்மீகத் திசைகாட்டி. உங்கள் அரசியல் நோக்கையும், திசையையும் அவரைக் கொண்டு நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
அவரது நோக்கமாகவோ, விருப்பமாகவோ இல்லாத போதிலும், அவர் சமூக மனசாட்சியின் காவலனாகவே திகழ்ந்தார். இந்த வகையில் ஒரு தலைசிறந்த பொது வாழ்க்கையை அவர் வாழ்ந்தார். இருந்த போதிலும், மிகப் பலரது உள்ளங்களின் நெருக்கமானதும், அமைதியானதுமான தாழ்வாரங்களில் கவனத்திற்குரிய ஒருவராக உருவானார்.
ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு, ஜனநாயகம் குறித்த நமது புரிதலை ஆழப்படுத்தவும், விரிவடையச் செய்யவும் அவர் கடுமையாக உழைத்தார். ஆணித்தரமாக வாதாடினார். கொள்கையும், நடைமுறையும் அவரது வேலைகளில் இசைந்திருந்தன. அவர் கட்டுரைகள் எழுதினார். வழக்குகளில் வாதாடினார். உண்மை அறியும் குழுக்களை அமைத்தார். அரசு அதிகாரத்தின் இருண்ட அம்சங்களை கவனத்திற்கு கொண்டு வந்தார். 1980-களின் துவக்கத்தில் அவர் ஆந்திரப் பிரதேச குடியுரிமை அமைப்பின்(APCLC) பொதுச் செயலாளராக பணியாற்றிய போது, அவரது குடியுரிமைச் செயல்பாடுகள் பரவலாக கவனம் பெற்றது.
அது புகழ்பெற்ற மோதல் படுகொலைகளின் காலம். ஆந்திராவின் பின்தங்கிய, பழங்குடிப் பகுதிகளில் முந்தைய மக்கள் யுத்தக் குழுவின் இலட்சியப் பிடிப்புள்ள ஏராளமான போராளிகளும், அவர்களது ஆதரவாளர்களும் கொல்லப்பட்ட காலம். அடக்குமுறை சட்டங்களும், ‘நீளக் கத்திகளும்’ கோலோச்சிய அந்தக் காலத்தில், அவர் கொலை மிரட்டல்களை எதிர்கொண்டார். காவல்துறையின் நிழல் அமைப்பால் கடத்தப்பட்டார். ஒரு சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்தார் என பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவையனைத்தையும் தாண்டி வந்து, 1990-களின் மத்தியில் அக்காலம் முடிவுக்கு வந்த பொழுதில், உரிமை மீறல்கள் குறித்து பரந்ததும், விரிந்ததுமான பொருளில் சிந்திப்பதன் முக்கியத்துவம் குறித்து அவர் எழுதத் துவங்கினார்.
கேள்விகேட்பாரற்று குடிமக்கள் மீது அரசு நிகழ்த்தும் வன்முறையே ஜனநாயகத்திற்கான மிக மோசமான ஆபத்து எனபதை அவர் ஏற்றுக் கொண்ட போதிலும், இன்னும் பல அம்சங்களில் நிகழும் உரிமை மீறல்களையும் கவனத்திற்கு கொண்டு வந்தார். சாதிரீதியாகவும், பாலினரீதியாகவும் நிகழ்த்தப்படும் அமைப்பாக்கப்பட்ட ஏற்றத்தாழ்வே இந்த உரிமை மீறல்களின் தோற்றுவாயாக விளங்குகிறது என அவர் வாதிட்டார். மேலும், ‘வர்க்கப் போர்’ என்ற பெயரில், பாதுகாப்பற்ற குடிமக்களும், சிறிய அரசு ஊழியர்களும் உயிரிழப்பதற்கு கம்யூனிசப் போராளிகளின் பிற்போக்கான வன்முறை வழிவகுக்கிறதென்றும், அதே வேளையில் அரசு அதிகாரத்தின் உண்மையான, பொருளாதார அடித்தளங்கள் தங்குதடையின்றி எவ்விதப் பாதிப்புமின்றி நீடிக்கின்றன என்பதை சுட்டிக் காட்டினார். ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தையும், மக்கள் போராட்டங்களின் விளைவாக அரசியல் சட்டத்தில் உத்திரவாதம் செய்யப்பட்டுள்ள உரிமைகளின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். வரலாற்றுரீதியாகக் கடுமையாகப் போராடிப் பெற்ற இந்த உரிமைகளை குடியுரிமை அமைப்புகள் பாதுகாக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிலையில், நிறைய வேலைகள் செய்யப்பட வேண்டியிருந்தன. காஷ்மீர், வடகிழக்கு பிரச்சினைகளுக்காக அவர் ஹைதராபாத்தை விட்டு, தொடர்ந்து பயணிக்க நேர்ந்தது. காஷ்மீர் குறித்த அவரது எழுத்துக்கள்… இந்திய அரசு, இராணுவம் மற்றும் பள்ளத்தாக்கிலிருந்து மூடிமறைக்கப்பட்ட செய்திகளை அன்றாட செய்திகளாக வழங்கும் இந்திய பத்திரிகையுலகின் கைக்கூலித்தனத்தை குறித்த நடுநிலைமையானதும், அச்சமூட்டக் கூடியதும், கூர்மையானதுமான ஆய்வுகள், ஈடுஇணையற்றவையாகும். பிற இயக்கங்கள், குறிப்பாக மேற்கு மற்றும் தென்னிந்தியாவில் இயங்கிய சாதி எதிர்ப்பு இயக்கங்கள் குறித்து அவர் ஆய்வு செய்தார். அதன் மூலம், தனது இயல்புப்படி, சாதிப் படிநிலை குறித்த பிரமிக்கத்தக்க அவதானிப்புகளை முன்வைத்தார். சாதி ஒரு உற்பத்தி உறவாக நிலவுவதையும், எதிர்த்துப் போராடாத வரை, மூலப்பொருட்கள், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஒருவர் கைக்கொள்வதை வரையறுத்து ஒடுக்கும் சக்தியாக விளங்குவதையும் சுட்டிக் காட்டினார்.
தொடர்ந்து வரும் இந்திய அரசின் மக்கள் விரோத, முதலாளித்துவ ஆதரவு நிலைகள்… எதிர்ப்பை வெளிப்படுத்துவதில் தடைகளை உருவாக்கும் சல்வா ஜூடும் போன்ற அரசு ஆதரவு காவல் படைகளின் பங்கு… அதே வேளையில் மாவோயிஸ்டுகளின் பெரிதும் பிரச்சினைக்குரிய வன்முறைப் பயன்பாடு…குறிப்பாக அதிகாரத்திற்கெதிராக மக்களை அணிதிரட்ட வாய்ப்புள்ள இடங்களிலும் அவ்வாறு வன்முறையைப் பயன்படுத்துவது… என பல்வேறு சுரங்கள் இணைந்த ஒரு இசைப் பாடலுக்கு ஒப்பானதும், செறிவானதுமான அவரது கருத்துகள், எங்களில் பலருக்கு கடந்த வருடத்திலும், எப்பொழுதும் வழிகாட்டின.
வன்முறை மற்றும் வன்முறையல்லாத வழிமுறைகள் குறித்த அவரது சமீபத்திய கட்டுரைகள் ஒன்றில், வன்முறைப் பயன்பாடு குறித்த வறட்டுவாதத்தை கைவிடுவது முக்கியமானது என்பதை சுட்டிக் காட்டினார். அதே வேளையில், முதலாளித்துவ மற்றும் அரசு பயங்கரவாததிற்கெதிரான வன்முறையின் எல்லைகள் குறித்தும் கவனம் கொள்வது அவசியமானது என்பதை வலியுறுத்தினார். ஒரு எளிமையான அமைதிவாதத்தை அவர் முன்வைக்கவில்லை. மாறாக, மக்களை அணிதிரட்டுவதன் அவசியத்தை, போர்க்குணமிக்க இயக்கங்களைக் கட்டுவதைப் பேசினார்.
முற்போக்கான மக்கள் போராட்டங்களை விரும்பிய ஒருவராக, அத்தகைய போராட்டங்களின் அறங்களை எல்லா சமயத்திலும் சோதிக்க விரும்பியவராக, கொள்கைக்கும், நடைமுறைக்குமான உறவை எப்பொழுதும் பரிசோதிக்க விரும்பியவராகவும்தான், அவர் தன்னை நினைவு கூர விரும்புவார் எனச் சொல்லலாம்.
எழுத்தாளர் வ.கீதா, ‘தி இந்து’, 10-10-2009
மேலும் படிக்க:
பாலகோபால் பேட்டி பாகம்-1
பாலகோபால் பேட்டி பாகம்-2
பாலகோபால் பேட்டி பாகம்-3
பின்குறிப்பு: திரு.பாலகோபாலின் மறைவிற்குப் பிறகு, அவரது எழுத்துக்கள் தொகுக்கப்பட்டு, மேலும் இரங்கல் செய்திகள், புகைப்படங்கள் அடங்கிய இணையத்தளம் துவக்கப்பட்டுள்ளது. பார்க்க: http://balagopal.org


